தமிழ்நாட்டில், சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொற்று எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து கண்டறிவது மிகுந்த சிக்கலாக உள்ளது.
இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியத்தால் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் மூலம் கரோனா பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என கண்டறியும் சோதனைகளை நடத்த சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக சென்னை நகரில் உள்ள முக்கியமான நீரேற்று நிலையங்கள் மற்றும் நீரை தேக்கி வைக்கும் ராட்சத தொட்டிகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதனை பி.சி.ஆர் கருவியின் உதவியுடன் சோதனை நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அலுவலர்கள் கூறுகையில், சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பு கருதி மட்டுமே இந்தச் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும்,பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுவதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.
முன்னதாக, உலக நாடுகள் பலவற்றில் தண்ணீர் மூலம் கரோனா பரவுவதாக கண்டறியப்படாத நிலையில், சென்னை குடிநீர் வாரியம் இந்தச் சோதனையை மேற்கொள்ளவுள்ளது.
இதையும் படிங்க: தொடங்கியது அமைச்சரவைக் கூட்டம்