சென்னை: கோடைக்காலம் தொடங்கிய நாள் முதல் தமிழ்நாட்டில் வாட்டும் வெயிலின் தாக்கம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் (ஏப்.18), நாளையும் (ஏப்.19) வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன்காரணமாக, தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஏப்.20ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இடி மின்னலுடன் மழை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.21, 22ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்றும் (ஏப்.18), நாளையும் (ஏப்.19) அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை. கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்.. பீர் வேண்டாம் மோர் குடிங்க.. மருத்துவர்கள் கூறும் சம்மர் டிப்ஸ்!