சென்னை பல்லாவரம் பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் துரை, லலிதா தம்பதி. இவர்களது மகன் அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் (42) வாட்டர்கேன் சப்ளை செய்து வந்தார். இவருக்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் மூன்று நாட்களுக்கு முன்பு பல்லாவரம் டேனரி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் சிகிச்சைக்கு 35 ஆயிரம் ரூபாய் கட்ட கூறியுள்ளனர். அதற்கு அல்போன்ஸ் ஆரோக்கிய ராஜ் சகோதரர் முதல் தவனையாக 24 ஆயிரம் ரூபாய் கட்டி உள்ளார்.
இன்று (ஆக.29) காலை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரின் சகோதரரிடம் அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் தற்கொலை செய்து உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரர், அவரின் உறவினர்களுடன் மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் காவல் துறையினர் இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அல்போன்ஸ் ஆரோக்கியராஜ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் தெரிவித்து, உடலை உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பல்லாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல...
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104
இதையும் படிங்க: குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன்” - காணொலி வெளியிட்ட குற்றவாளி!