திருமண ஆசை காட்டி நடிகையை மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிணை கோரிய மனுவில், காவல் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாகக்கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்பிணைகோரிய மணிகண்டன்
இந்த வழக்கில், முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16 அன்று தள்ளுபடி செய்தது.
கைதான மணிகண்டன்
இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர்.பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை வரும் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணைகோரிய மணிகண்டன்
இந்நிலையில் இந்த வழக்கில் பிணைகோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
காவல் துறை பதிலளிக்க ஆணை
இந்த மனு இன்று நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் கேட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்