சென்னை அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் அதிகளவில் காணாமல் போவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவந்தது.
இதனையடுத்து, அம்பத்தூர் காவல் இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி, அம்பத்தூர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் காவல் துறையினர், பட்டாபிராம், கருணாகரசேரி உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்த போது, அவரிடம் வாகனம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாதது தெரியவந்ததையடுத்து, காவல் துறையினர் அவரைக் கைது செய்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பட்டாபிராம் நவஜீவன் நகர் பகுதியைச் சேர்ந்த நரேஷ் (எ) விக்டர் என்பதும், இவர் குற்ற நிருபர் (crime reporter) என்று கூறிக்கொண்டு வலம்வந்ததும் தெரியவந்தது. மேலும், டாஸ்மாக், ரயில்வே, மால்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை நோட்டமிட்டு, லாவகமாகத் திருடி அதனை குறைந்த விலைக்கு இவர் விற்று வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இவரால் விற்பனை செய்யப்பட்ட 13 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த பட்டாபிராம் காவல் துறையினர், குற்றவாளியை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் பைக் திருடனாக மாறிய பாதிரியார்!