சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, மறைந்த டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என 2016ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றிடம் வழங்க அவகாசம் வழங்கியிருந்தது.
![சென்னை உயர் நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-encroachmentfreezone-script-7204624_23062022130552_2306f_1655969752_751.jpeg)
இந்த வழக்குத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் என்.மாலா அடங்கிய அமர்வில் இன்று (ஜூன்.23) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தற்போது வரை நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக் கூறி, அதற்கான புகைப்படங்களைத் தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
![சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15636277_th-c.jpg)
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வரும் திங்கட்கிழமை முதல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், அந்த 7 நாட்களுக்கான சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் அதுதொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.