சென்னை: தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பது, மலைவாசஸ்தளங்கள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் வியாழன் அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளில் 180 இணைப்புகளில் 150 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மற்றவை வீட்டு உபயோகத்திற்கான இணைப்பு என்பதால் துண்டிக்கவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தென் மன்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவையடுத்து செங்கற்களை எடுக்க ஏராளமான வாகனங்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இரவு நேரத்தில் செங்கற்களை எடுக்க உயர் மின் அழுத்த மின்சார விளக்குகள் தற்போதும் பயன்படுத்தப்படுவதாகவும், தற்காலிகமாக போடப்பட்ட காட்டுப்பாதையை விலங்குகளும் பயன்படுத்துவதால் விலங்குகள் மற்றும் மனித மோதல்கள் அடிக்கடி
ஏற்படுகின்றன. கடந்த 1 மாதத்தில் யானை தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, யானை வழித்தடங்கள் தடைபட்டுள்ளதா? செங்கல் சூளைக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதா? அனுமதி இல்லாமல் புதிய பாதைகள் போடப்பட்டதா? என்பதை நேரில் ஆய்வு செய்து, நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டது கண்டறியப்பட்டால் அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனர்.
மேலும், பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் படி அபராதத் தொகை செலுத்திய நிறுவனங்கள் செங்கற்களை எடுக்கலாம். ஆனால், இரவு நேரங்களில் செங்கற்களை எடுக்க கூடாது. பகல் நேரங்களில் விலங்குகள் நடமாட்டம் இருந்தால் வாகனங்களை இயக்க கூடாது. எவ்வளவு வாகனங்கள் இயக்கப்படுகின்றன? என்பதை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அன்னிய மரங்கள்: அன்னிய மரங்களை அகற்றுவது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெற்று அறிக்கைகளை அரசு வெளியிடுவதால் மட்டும் மாற்றம் ஏற்படாது. மாவட்ட அளவில் குழு அமைப்பது? மாவட்ட ஆட்சியர்களிடம் அன்னிய மரங்களின் விவரங்கள் கேட்பது? ஆகியவற்றால் எந்த பயனும் இல்லை.
அரசு நேரடியாக எப்படி மரங்களை அகற்ற வேண்டும்? அதற்கான வழிமுறை என்ன? என்பதை இரண்டு வாரத்தில் தெரிவிக்க வேண்டும். அன்னிய மரங்களை அகற்ற நிதியுதவி அளிக்க தயாராக உள்ள தனியார் நிறுவனங்களை அரசு அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் மாதம் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் - தீபா தரப்புக்கு இறுதி அவகாசம்!