சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக, பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, மதிப்பெண்கள் வழங்காமல் மாணவர்களுக்குத் தேர்ச்சி சான்றிதழ் வழங்கும்படி 2021 ஜூலை 26ல் அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த நக்ஷத்திரா பிந்த் என்ற மாணவி, கேரளா பள்ளியில் 11ஆம் வகுப்பு சேர மதிப்பெண் சான்று கேட்பதால், தனக்கு சான்றிதழ் வழங்கக் கோரியும், மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி சான்று வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று (மே.3) விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, தமிழ்நாடு அரசு மட்டுமல்லாமல் பல மாநிலங்கள் தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், அரசின் கொள்கை முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என சுட்டிக்காட்டியது. மேலும், தேர்வு நடத்தாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தேர்வு நடத்தாமல் பலருக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில்,மாணவி கோரிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டை பதவி உயர்வு கோரிய உதவி பேராசிரியர்களின் மனுக்கள் தள்ளுபடி