கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகர் - அமுல் நகர் சந்திப்பில் செல்வபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன், ஏட்டு சாலமனுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடமாடிக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவரது பெயர் சதாம் உசேன் என்பதும், மேலும் இந்திரா நகரை பகுதியை சேர்ந்த குமரேசனின் மகன் அருண்குமார் என்பவர், திருவாரூரை சேர்ந்த ராஜா முகமது - நூர்நிசா தம்பதியின் மகள் சஹானமியை திருமணம் செய்து கொண்டதாகவும், மகன் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கொலை செய்ய பக்ருதின், இம்ரான், முகமது அலி ஜின்னா ஆகியோருடன் கோவை வந்ததாக சதாம் உசேன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் நால்வரையும் செல்வபுரம் காவல் நிலையத்தினர் கைது செய்ததுடன், தேசிய புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்டுமென வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி ஜாமீன் கோரி கோவை நீதிமன்றத்தில் மூன்று முறை சதாம் உசேன் தாக்கல் செய்த மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேச விரோதி போல சித்தரிக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி, கோவை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வு, சந்தேகத்தின் அடிப்படையில் கைதான சதாம் உசேனின் ஒப்புதல் வாக்குமூலத்தை தவிர, குமரேசனை கொலை செய்ய வந்தார் என்பதற்கும், சமூகத்தில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வந்தார் என்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை என கூறி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நீதிபதிகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் குறித்த இறுதி அறிக்கை... ஆறுமுகசாமி ஆணையம் நாளை தாக்கல்