கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள ராஜேஸ்வரி நகர் குடியிருப்போர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,'தங்கள் குடியிருப்புக்கு அருகில் உரிய அனுமதியின்றி முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலையை கார்த்திக் குப்தா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் துவங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்திரி பதப்படுத்தும்போது அதன் ஓட்டில் இருந்து ரசாயன வேதிப்பொருட்கள் எடுக்கப்படுவதாகவும், முந்திரியை சுடுவதற்காக மரக்கட்டைகள் எரிக்கப்படும் போது கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைட் பரவுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, முந்திரி பதப்படுத்தும் ஆலையை குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும், நகராட்சி பகுதிகளில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் அமைக்கப்பட வேண்டும் என்பதால், உரிய அனுமதி பெறாத இந்த ஆலையை மூட சுற்றுச்சூழல் துறை பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் ஆலையை மூட பரிந்துரை செய்தனர். இதை அடுத்து ஆலையை மூட மாவட்ட ஆட்சியர், கடந்த 2019ல் உத்தரவு பிறப்பித்தார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட ஆலை தற்போது முழு அளவில் இயங்கி வருகிறது. உரிய அனுமதியின்றி செயல்படும் அந்த ஆலையை மூட உத்தரவிட வேண்டும் எனவும், ஆலையை இடிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆலையை மூட ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலை தொடர்ந்து இயங்குகிறதா? என, பண்ருட்டி நகராட்சி ஆணையர் அறிக்கை அளிக்க வேண்டும்.
மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.