சினேகம் அறக்கட்டளை யாருடையது என கவிஞர் சினேகனும், பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமியும் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காவல் ஆணையர் அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஜெயலட்சுமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சினேகன் நடத்தி வரும் அறக்கட்டளை பெயரில் நான் மோசடி செய்ததாக ஆதாரமற்ற புகார் அளித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் எனது தரப்பு விளக்கங்களை விசாரணை அதிகாரியிடம் அளித்துள்ளேன். ஆனால் சினேகன் புகார் அளித்து விட்டு அதற்குண்டான ஆதாரங்களை இதுவரை சமர்பிக்க வில்லை. மாறாக நான் அளித்து 20 நாட்களான நிலையில் என் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் சினேகனுடன் சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்துவதாக அவர் கூறினார்.
மேலும் தான் பாஜகவில் இருப்பதால் என்னை அசிங்கபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் சினேகன் பொய்யான புகார் அளித்ததுடன், ஊடகங்களில் என்னை குறித்து அவதூறு பரபரப்பும் வகையில் பேசி வருகின்றார். ஒரு பெண் என்றும் பாராமல் தன்னை அவமானப்படுத்தும் வகையில் பேசிய சினேகன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவதாக தெரிவித்த அவர், என் மீது பொய் புகார் அளித்த சினேகன் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் சினேகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். மேலும் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் நண்பர்கள் வைத்த பேனர்