சென்னை: மாநாட்டுக்குத் தலைமையேற்ற எழுத்தாளர் உதயசங்கர், சங்கத்தின் தேவையையும் படைப்பாளிகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் விளக்கினார். சங்கப் பொதுச்செயலாளர் விழியன், "குழந்தைகள் மீது எந்தவிதமான வன்முறை நிகழ்த்தப்பட்டால், அதற்கு எதிராகவும் குழந்தைகளின் நலன் சார்ந்தும் சங்கத்தின் குரல் ஒலிக்கும். குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதோடு, அவர்களை எழுதத் தூண்டும் செயல்களை இச்சங்கம் முன்னெடுக்கும். எழுத்தாளர்கள் எழுதுவதற்கு உரிய உதவிகளையும், கல்வியில் கலை இலக்கியத்தின் பங்களிப்பை அதிகரிக்கவும் சங்கம் செயல்படும்" என்றார்.
தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சு. தமிழ்ச்செல்வன், கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா. காமராசு, மலையாள எழுத்தாளர் பி.வி. சுகுமாரான், கோவா எழுத்தாளர் ராஜ ஸ்ரீ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
![Launch of Tamil Nadu Writers Artists Association for children](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12129400_3.png)
எழுத்தாளர்களின் வாழ்த்துரை
எழுத்தாளர் சு. தமிழ்ச் செல்வன், "குழந்தைகள் நகரம், மாநகரம், கிராமம் உள்ளிட்ட பல அடுக்குமுறைகளில், மாறுபட்ட வாழ்க்கைச் சூழல்களில் வளர்கிறார்கள். அச்சூழலுக்கு ஏற்ற படைப்புகள் நமக்குத் தேவை. குழந்தைகளை கேள்வி கேட்கத் தூண்டினாலே போதும். மேலும், அவர்கள் உலகத்துக்கு அந்நியமானவற்றையும் அங்கீகரிக்க, சமமாக நடத்தும் குணத்தை வளர்த்தெடுக்கும் படைப்புகளை உருவாக்க வேண்டியது இக்காலத்தின் அவசியம்" என தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டு பேசினார்.
புரஸ்கார் விருது பெற்ற ஆயிஷா நடராசன், மற்ற மாநிலங்களில் சிறார் இலக்கியம் என்னவிதமான போக்குகளில் எழுதப்படுகின்றன என்பது குறித்து விரிவாகப் பேசினார். மேலும், தற்போதைய சூழலுக்கு ஆடியோ வடிவில் புத்தகங்களை இயற்றவேண்டிய தேவை குறித்தும் விளக்கிப்பேசினார்.
![Launch of Tamil Nadu Writers Artists Association for children](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12129400_1.png)
குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்து, குறிப்பாகக் கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்து செயல்படுவதை முதன்மையான நோக்கமாக கொண்டுள்ள இச்சங்கத்தின் தொடக்க நிகழ்வில் 200க்கும் மேற்பட்டோர் இணைய வழியில் பங்குபெற்றனர்.
சங்கத்தின் திட்டம்
நூலகங்களில் சிறார் புத்தகங்களை கொண்டு சேர்த்தல், சிறார் இலக்கிய கலைப் படைப்புகளுக்காக இணையதளத்தை உருாக்கி நிர்வகித்தல், கல்வியில் கலை இலக்கியத்தை இணைக்க முயற்சி மேற்கொள்ளுதல் என்ற ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் முன்னெடுக்க இந்த சங்கம் திட்டமிட்டுள்ளது.
![Launch of Tamil Nadu Writers Artists Association for children](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12129400_2.png)
சிறார் எழுத்தாளர் உதயசங்கர் இச்சங்கத்திற்கு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள், பதிப்பாசிரியர்கள், குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் இச்சங்கத்தில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுளளனர். இச்சங்கத்தை தொடர்பு கொண்டு வாழ்த்த, அதன் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க contact.tncwaa@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதையும் படிங்க: குழந்தைகளின் லட்சிய வேட்கையைக் கொல்லும் அதீத கட்டுப்பாடுகளை கைவிடுங்கள்: யுனிசெஃப்