சென்னை: ஸ்ரீபெரும்பத்தூர் தாலுகா தண்டலம் கிராமத்தில், லீலாகுமாரி என்பவர் தனது கணவரிடமிருந்து செட்டில்மென்ட் மூலம் 33 சென்ட் நிலத்தை 2010ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
தனக்குச் சொந்தமான இந்நிலத்தைப் பராமரிக்க வேண்டி 2015ஆம் ஆண்டு சாதிக் பாஷா என்பவருக்கு பொது அதிகார பத்திரம் பதிவுசெய்து கொடுத்துள்ளார். இதனைப் பெற்ற ஜாபர் சாதிக் பாஷா, அவருக்கு வகுத்த ஒப்பந்தப்படி நடந்துகொள்ளாததால், அந்தப் பொது அதிகார பத்திரத்தை அதே ஆண்டே ரத்துசெய்துள்ளார்.
நில அபகரிப்பு
இந்நிலையில் ஜாபர் சாதிக் பாஷா, லீலாகுமாரியின் சொத்தை அபகரிக்கத் திட்டமிட்டு, லீலாகுமாரியைப் போல் வேறு ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்யவைத்து 2021ஆம் ஆண்டு போலியான பொது அதிகார பத்திரத்தை மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜாபர் சாதிக் பாஷா தன் பெயரில் பதிவுசெய்துள்ளார்.
அந்தப் போலி பத்திரத்தை அடிப்படையாக வைத்து விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சிவமணி என்பவருடன் கூட்டு சேர்ந்து, கிரைய ஒப்பந்தம் பத்திரத்தை பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்து, லீலாகுமாரிக்குச் சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்துள்ளார்.
இது குறித்து லீலாகுமாரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர்.
நீதிமன்ற காவல்
இதனைத்தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட கே.கே. நகரைச் சேர்ந்த ஆள்மாறாட்ட நபர் உஷாசக்திவேல் (37), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சிவமணி (38), கீழ்பாக்கத்தைச் சேர்ந்த அன்பழகன் (43), பட்டாளம் பகுதியைச் சேர்ந்த முகம்மது அப்சர் (32), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வேம்புலி (48), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி (59), ஷெனாய் நகரைச் சேர்ந்த சுமதிசக்திவேல் (52) ஆகியோரைக் கைதுசெய்தனர்.
![நில அபகரிப்பு நில மோசடி அபகரிப்பு மோசடி சென்னை ஸ்ரீபெரும்பத்தூர் நில அபகரிப்பு சென்னை செய்திகள் chennai news chennai latest news land issue chennai sriperumbudur land issue ccb](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-10-ccbarrest-script-7202290_08102021222639_0810f_1633712199_1108.jpg)
இதனையடுத்து இந்த ஏழு பேர் மீதும் நில அபகரிப்பு வழக்குப்பதிவு செய்து, சிறப்பு நீதிமன்றம் முன்னிறுத்தி, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.