சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த லதா கோவிந்தசாமி என்பவர் 1995ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சேர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றிவந்தார். இந்நிலையில், அவர் பதவிக்கு தேவையான தகுதிகளை மேம்படுத்திக்கொள்ளாததால், 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணி ஒதுக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. 2017 மே 2ஆம் தேதி மயக்கம் மற்றும் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக விடுப்பு எடுத்த நிலையில், மருத்துவ விடுப்பு குறித்த சான்றிதழ்களை சமர்ப்பித்தும், அவற்றை ஏற்காமல், லதாவை பணிநீக்கம் செய்து, ஜூன் மாதம் டிசிஎஸ் மனிதவள மேம்பாட்டு பிரிவு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தன்னை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட கோரியும், பணியிலிருந்து நீக்கப்பட்ட காலத்திற்கு 18 விழுக்காடு வட்டியுடன் ஊதியத்தை வழங்க கோரியும் சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் லதா வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி என். வேங்கடவரதன், லதா தாக்கல் செய்த ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் , அவர் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதாக குறிப்பிட்டு, பணி நீக்க உத்தரவு ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வேலையிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து சம்பள பாக்கியில் 50 விழுக்காடு வழங்க வேண்டும் எனவும், லதாவை மூன்று மாதத்தில் மீண்டும் பணியில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.