வார இதழின் விருதுநகர் மாவட்டச் செய்தியாளர் கார்த்தி இன்றிரவு சிவகாசியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இந்தக் கொடூர தாக்குதலில் நிலைகுலைந்துபோன கார்த்தி சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தியாளர் கார்த்தி மீதான இந்தக் கொடூர கொலைவெறி தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ”இன்று வெளியான வார இதழில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனுக்கும் இடையே உள்கட்சிப் பிரச்னை நிலவுவதாக செய்தி வெளியான நிலையில், செய்தியாளர் மீது இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் கார்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆளுங்கட்சி சட்டப்பேரவையின் உறுப்பினரின் ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது. பத்திரிகையாளர்கள் சிந்தும் ரத்தம் தமிழ்நாட்டிற்குக் கேடானது. செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் கார்த்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது உடனடி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையும் அரசையும் வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் செயல்கள் அதிகரித்துவரும் அவல நிலையைக் கவனத்தில் கொண்டு முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.