திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பாச்சலூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஒருவரின் ஒன்பது வயது மகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படித்துவந்தார்.
கடந்த 14ஆம் தேதி சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றிருந்த நிலையில், மதியம் பள்ளிக்கு பின்புறத்தில் தீயில் கருகிய நிலையில் இறந்துகிடந்தார். இது குறித்து தகவலறிந்த தாண்டிக்குடி காவலர்கள் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
சிறுமியை கொலைசெய்த நபர்களைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி அவரது பெற்றோர், உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தாண்டிக்குடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நேரில் சென்று விசாரணை நடத்தினர். சிறுமியின் உடல் கருகிய நிலையில் இருப்பதால் வழக்கு குறித்து எந்தவிதமான துப்பும் கிடைக்காமல் காவலர்கள் திணறிவந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் சிறுமி மர்ம மரணம்: நீதி கேட்டு வலுக்கும் போராட்டம்