சென்னை: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க உள்ளது. அம்மாநில தேர்தலில் பாஜக சார்பாக இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அண்ணாமலைக்கு 10 மாவட்டங்களில் 86 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், 34 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், "கர்நாடக சட்டமன்றத் தேர்தலை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 26 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
கட்சி கொடுத்திருக்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைத்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். இதனால் இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் தவறில்லை. காங்கிரஸ் கட்சிக்கு இன்றிலிருந்து சவால்கள் தொடங்கி உள்ளன.
காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வாக்குகள், காங்கிரஸ் கட்சிக்குச் சென்று விட்டதால் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சாதாரணமான விஷயம். பிரதமர் நடத்திய பேரணி மூலம் பெங்களூருவில் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 28 தொகுதிகளில் 16 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடகத் தேர்தலில் பணியாற்றியதால் எனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்துள்ளது. பாஜகவின் வாக்கு வங்கிகள் சரியவில்லை. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட காங்கிரஸ் அரசு முயற்சித்தால் போராட்டம் நடத்துவோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் - வானதி சீனிவாசன் அழைப்பு!