சென்னை: செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுக்குழுவில் திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் மேடையில் பேசிய கனிமொழி, "1947ஆம் ஆண்டு திமுக துவங்கப்பட்ட போது பெரியாருக்கும் நமது தலைவர்களுக்கும் சிறிய இடைவெளி இருந்தது.
அப்போது அண்ணா அவர்கள் நம் இயக்கத்தை நடத்தும் விதமானது பெரியாரை ஆறுதல் படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என கூறினார். 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. அப்பொழுது சுயமரியாதை திருமணம் மற்றும் தமிழ்நாட்டிற்கு பெயர் சூட்டுதல் போன்றவை பெரியாருக்கு ஆறுதலாக இருந்தது.
சமூக நீதி, மாநில உரிமை மற்றும் மாநில சுயாட்சி போன்ற கொள்கைகளை இறுதி வரை காத்தவர் கலைஞர் கருணாநிதி. அனைத்து அடித்தட்டு மக்களுக்குமான உயர்கல்வியை சாத்தியமாக்கியவர் கருணாநிதி. கருணாநிதி மறைவை தொடர்ந்து திமுகவில் வெற்றிடம் உருவாகிவிடும் என பல பேர் கூறினார்கள்.
பல பேர் ஆசைப்பட்டார்கள், ஆனால் அதையெல்லாம் அழிக்க கூடிய ஒருவராக நம்முடைய தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். இன்னும் நூறு ஆண்டுகள் கூட பூர்த்தி ஆகவில்லை. ஆனால் சனாதன சக்திகள் மீண்டும் பழைய முறையை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தந்தை பார்த்த தொழிலை மகன் பார்க்க வேண்டுமென கூறுகின்றனர்.
பெண்களுக்கு சம உரிமை அளித்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியில், மீண்டும் அவர்களை சமையல் அறையில் வைத்து பூட்டி விட வேண்டுமென முயற்சி செய்கின்றனர். அப்பா இல்லாத இடத்தில் நான் உங்களை வைத்து பார்க்கிறேன். நீங்கள் செல்லும் வழிகளில் அணிவகுக்க தயாராக இருக்கிறேன்" என கூறினார்.
இதையும் படிங்க: அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது! கொண்ட கொள்கைதான் பெரிது! - முதலமைச்சர்