டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கனிமொழி எம்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு காவலர்களை அதிகளவில் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்த அவர், "இதுபோன்ற பிரச்னைகள் அரசு அலுவலகங்களில் குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கிறது.
எல்லா இடங்களிலும் இதுபோன்ற மனப்பான்மைகளை சரிசெய்தால்தான் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மொழிக்கும் இந்த நாட்டில் இடம் இருக்கிறது என்ற நம்பிக்கையைத் தரும். நான் படித்த பள்ளியில் ஆங்கிலம், தமிழ் மட்டுமே இருந்தது. இத்தனை ஆண்டுகள் நான் டெல்லியில் இருந்தாலும் இதுவரை நான் இந்தி கற்றுக்கொள்ளவில்லை.
இந்தி தெரிந்தால்தான் இந்தியர்களாக இருக்கமுடியும் எனக் கூறுவது எவ்வளவு பெரிய அவமானம். இதே பிரச்னையை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் எதிர்கொண்டிருக்கின்றனர். இந்தி தெரிந்தால்தான் இந்தியாவில் இருக்கமுடியும், ஒரு மதத்தைப் பின்பற்றினால்தான் உன்னை ஏற்றுக்கொள்வோம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்றார்.
இதையும் படிங்க: 'அரசியலுக்கு தமிழ், தொழிலுக்கு இந்தி என்ற திமுகவின் குடும்பப் போக்கு கண்டிக்கத்தக்கது' - பாஜக செய்தித் தொடர்பாளர் ஆவேசம்