சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு திருச்சி, கோயம்பத்தூர், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி ஸ்கொயர் குரூப்ஸ் இயங்கி வருகிறது. திமுகவுக்கு நெருக்கமான நிறுவனம் எனவும், திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்த நிறுவனம் 38 ஆயிரத்து 827 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி இருப்பதாக தொடர்ச்சியாக பாஜக சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
மேலும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் கடந்த 24ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாநில அரசுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய நிறுவனம் என்பதால் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரை பாதுகாப்புக்கு அழைத்து வரப்பட்டு சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னையில் சேத்துப்பட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீடு, அவரது மகன் கார்த்திக் வீடு, ஆடிட்டர் சண்முக மூர்த்தி, முதல்வர் சபரீசனின் மருமகனின் நண்பர்கள், நெருக்கமானவர்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மூன்று நாட்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை மட்டும் நிறைவடைந்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு மற்றும் பத்திரப்பதிவு செய்துள்ள நிலங்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜி ஸ்கொயர் வங்கி கணக்கு விவரங்களை பெற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள பண பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து ஈட்டிய வருமானத்திற்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் முறையாக வரி செலுத்தி உள்ளனரா அல்லது வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனரா எனவும் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு இதே நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி கைப்பற்றியுள்ள ஆவணங்கள் அதை ஒப்பிட்டும் விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மூன்று நாட்களாக நடைபெறும் இச்சோதனை மேலும் சில நாட்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: TN VAO hacked: பாதுகாப்புக்கு துப்பாக்கி வேண்டும்.. கிராம நிர்வாக அலுவலர்கள் போர்க்கொடி