சென்னை: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தினரின் மதமாற்ற முயற்சிதான் காரணம் என்ற மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், இது தொடர்பாக விசாரிக்க அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
குழு உறுப்பினர்களான விஜய சாந்தி, சித்ரா ராய் வாகு, சந்தியா ராய், கீதா விவேகானந்தா ஆகிய நால்வரும் நேற்று முன்தினம் (பிப்ரவரி 1) மாணவியின் குடும்பத்தார் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை குறித்து வானதி சீனிவாசன் நேற்று (பிப்ரவரி 2) செய்தியாளரைச் சந்தித்து கூறுகையில், "மாணவி தற்கொலை தொடர்பாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது முதல் ஏழை மாணவிக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடிவருகிறோம். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது எங்களுக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றி. மாணவி மரணம் தொடர்பாக நால்வர் குழு தனது விசாரணை அறிக்கையை ஜெ.பி. நட்டாவிடம் வழங்கும்.
மாநில அரசுக்கு அவப்பெயர்
மாணவியின் அருகில் உள்ள வீட்டார், உறவினர்களிடம் கேட்டறியப்பட்டது. அரியலூர் மாவட்டத்தின் குக்கிராமத்தில் நடந்த சம்பவத்திற்கு பாஜக தேசியத் தலைமை குழு அமைத்ததன் மூலம் பெண் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பாஜக தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மாணவி மரணம் தொடர்பாக காவல் துறை செய்த தவறால் மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐக்கு சென்றுள்ள நிலையில், மாநில அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது. அதிமுக உள்பட பிற கட்சிகள் இந்த விவகாரம் குறித்து பேசாதது எங்களுக்கு வருத்தம் தருகிறது. சட்டப்பேரவையில் பேச எனக்கு முறையாக நேரம் தரப்படுவதில்லை, நேரம் கொடுத்தால் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் குறித்து பேரவையில் பேசுவேன்" எனத் தெரிவித்தார்.
ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக
தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஜயசாந்தி, "மாணவி, மதமாற்றம் குறித்த காணொலியில் தெளிவாகக் கூறியுள்ளார். இல்லாத விஷயத்தை நாங்கள் பேச மாட்டோம். மாணவியின் மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்கிறோம். மதமாற்ற குற்றச்சாட்டை மாணவியின் குடும்பத்தினரே முன்வைத்துள்ளனர். நாங்கள் புதிதாகப் பேசவில்லை. மாணவியின் தந்தை 25 ஆண்டுகால திமுக உறுப்பினர்.
மாணவி மரணம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேற்று பேசினோம். வழக்கு சிபிஐயிடம் இருப்பதால் அவர் அதிகமாக எதுவும் கூறவில்லை. மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் மாணவியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்தியாவில் 80% இந்துகளே
வரும் காலத்தில் கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் மதமாற்றம் செய்ய வற்புறுத்தக் கூடாது என்பதுதான் குழுவின் நோக்கம். மாணவி காணொலியில் கூறியதால்தான் உண்மை வெளியில் தெரிந்தது. இதுபோல் பல இடங்களிலும் நடக்கலாம். இதில் அரசியல் செய்வது எங்களது நோக்கம் இல்லை. மாணவியை அவரது அம்மா கொடுமைப்படுத்தியாகக் கூறுவது தவறான தகவல். வழக்கைத் திசைதிருப்பும் முயற்சி.
தமிழ்நாடு அரசு கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக இருக்கிறது. இந்தியாவில் 80 விழுக்காடு இந்துக்களே இருக்கின்றனர். மாணவி மரணம் தொடர்பாக முதலமைச்சர் அனைத்துத் தரப்பிலும் விசாரிக்க வேண்டும். படிப்பில் சிறந்த இந்து மாணவிகளை மதம் மாற்றுகிறார்கள். இந்த வழக்கில் இன்னும் பலரைக் கைதுசெய்ய வேண்டியுள்ளது. திமுக அரசு தமிழ்நாடு கலாசாரத்தை மாற்ற முயல்கிறது. முதலமைச்சர் ஏன் இந்த விஷயத்தில் மௌனமாக இருக்கிறார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 7 தொன்மையான சாமி சிலைகளை ரூ. 5 கோடிக்கு விற்க முயற்சி - பாஜக நிர்வாகி, 2 காவலர்கள் கைது