கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த தாதாக்கள், பெயரை மாற்றி கொண்டு போலி முகவரியுடன் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தமிழ்நாடு காவல்துறையினருக்கு இண்டர்போல் அலுவலர்கள் தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் கோயம்புத்தூரில் போலியான ஆவணங்களுடன் பதுங்கி இருந்த இலங்கை தாதாவான அங்கொட லொக்கா என்பவர் மாரடைப்பு காரணமாக கடந்த ஜூலை மாதம் உயிரிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதேபோல் மற்றொரு இலங்கை தாதாவான ஜெமினி பொன்சேக என்பவரும் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் பெங்களூருவில் வைத்து தாதா ஜெமினி பொன்சேகவை கைது செய்தனர். இவர், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தங்கி நாச வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இதேபோல் இலங்கை உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த சுமார் 10 தாதாக்கள் தங்களது பெயர்களை மாற்றி தங்கி இருப்பதாக தமிழ்நாடு காவல்துறையினருக்கு இண்டர்போல் அலுவலர்கள் அலெர்ட் கொடுத்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.