சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (34). இவர் பம்மல் பகுதியில் உள்ள செல்போன் கடையில் செல்போன் வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது அவர் செல்போன் வாங்குவதற்கான பணத்தை வீட்டில் வைத்துள்ளதால், அதனை எடுத்துவர இருசக்கர வாகனத்தைத் தருமாறு செல்போன் கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
பின் கடையின் உரிமையாளர் அவருக்கு இருசக்கர வாகனத்தைக் கொடுத்ததோடு, தனது கடையில் பணிபுரியும் நபர் ஒருவரையும் சத்தியசீலனுடன் அனுப்பியுள்ளார்.
பின்னர் பல்லாவரம் பகுதியில் தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதைப்போல் நடித்த சத்தியசீலன், குரோம்பேட்டை அருகே தனது வீட்டில் பணத்தை எடுத்துவருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால் வாகனத்தின் உரிமையாளர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் ஜமீன் பல்லாவரம் அருகே சத்தியசீலனை கையும் களவுமாகப் பிடித்து அவரைக் கைதுசெய்தனர்.
பின்னர் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்ததோடு, அவரை நீதி மன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.