ஐஐடி மாணவி பாத்திமா லத்திப்பின் மரணம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி மூன்று மணி நேரமாக தந்தை அப்துல் லத்திப், அவரது மகள் ஆயிஷா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் லத்திப், "விசாரணையின் போது பாத்திமா லத்திப்பின் லேப்டாப் மற்றும் டேப் ஆகியவற்றை சமர்ப்பித்தேன். அதில் பாஸ்வோர்ட போடப்பட்டுள்ளது. அவைகளை அன்லாக் செய்து, ஆய்வு செய்வதற்காக தடயவியல் துறையிடம் ஒப்படைத்துள்ளோம்.
மத்திய குற்றப்பிரிவு கேரளாவில் உள்ள பாத்திமா லத்திப்பின் தாயிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. தனது மகளின் தற்கொலைக்கு காரணமாக எவரேனும் இருப்பின் அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்று தருவதாகவும் கூடுதல் ஆணையர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணை திருப்தியளிக்கிறது. விரைவில் விசாரணை முடிந்து நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். விசாரணை தொடர்பான விஷயத்தை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
எனது மகள் பாத்திமா லத்திப் மரணம் போல் வேறொரு மரணம் நடைபெறக்கூடாது. இதுதொடர்பாக முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன். வருகின்ற திங்கட்கிழமையன்று இந்த வழக்கை துரிதப்படுத்த பிரதமர் மோடியிடம் புகார் அளிக்க உள்ளேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஆளப்பிறந்த மகராசனே'... 'வருங்கால சென்னை மேயரே' - தி.மு.க போஸ்டர்