கோவை மாவட்டம் சின்னயம்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் தனது நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள 250 வீடுகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 250 வீடுகளின் மின் விநியோகத்தை துண்டிக்க கடந்த விசாரணையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிரித்து சின்னயம்பாளையத்தில் உள்ள செல்வராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து மனுதாரர் பழனிசாமி, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் 106 காலிப்பணியிடங்கள்!