சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானிக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய தஹில் ரமானி; 'பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாக பணியாற்றியது குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்தார். மும்பையை ஒப்பிடும் போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குவதாகவும், இங்கேயே தானும் தனது கணவரும் குடியேற விரும்புவதால், இங்கு நிலம் வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஓராண்டு காலத்தில் 5040 வழக்குகளை விசாரித்து முடித்து வைத்தது நியாயமாகவே தான் கருதுவதாகவும், அதற்கு உறுதுணையாக இருந்த நீதிபதி துரைசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், எம்.எஸ்.ரமேஷ், ஜெயசந்திரன், தண்டபாணி, பாரதிதாசன் உள்ளிட்ட பல நீதிபதிகள் கலந்து கொண்டனர்.