சென்னை: இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளித்துள்ளார்.
இளங்கலை வகுப்புக்கான அறிக்கை
அதனடிப்படையில் கல்லூரிகள் திறந்து செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.எல், பி.சி.ஏ, பி.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட இளங்கலை, முதுகலை, பட்டயம் ஆகிய மூன்று ஆண்டு படிப்பு மாணவர்களில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமையும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெறும்.
முதுகலை வகுப்புக்கான அறிக்கை
இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, தற்போது இரண்டாம் ஆண்டில் பயில்பவர்களுக்கும் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்தப்படும்.
நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பு
பி.இ, பி.டெக், பி.எஸ்.சி (அக்ரி) உள்ளிட்ட நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக் கிழமையும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக் கிழமையும், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகள் நடைபெறும்.
ஐந்தாண்டு பட்டப்படிப்பு
பி.ஆர்க், பி.விஎஸ்சி, சட்டம் ஆகிய 5 ஆண்டு பட்டப் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக் கிழமையும், மூன்றாம், ஐந்தாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெறும்.
மாணவர்களுக்குத் தடுப்பூசிகட்டாயம்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை முடிந்த பின்னர் சில வாரங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரும் அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயிற்சி வழங்க வேண்டும்.
உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளைப் பேரிடர் மேலாண்மைத்துறையில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறந்து கொள்ளலாம்' என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விடுதிகளில் மாணவர்கள் தங்குவதற்கு தனித்தனி தடுப்புகளை அமைக்க உத்தரவு