சென்னை : பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கான தரவரிசையில் பட்டியலில் பல அரசு பள்ளி மாணவர்கள் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் எந்த மாணவரும் விடுபடவில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயங்குனரகத்தில் அமைச்சர் பொன்முடி ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேற்று முதல் சிறப்பு கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
25ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு
முதல் முறையாக பொறியியல் படிப்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 25ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
பலர் அரசு பள்ளியில் பயின்றதாகவும், தங்களது பெயர் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெறவில்லை எனவும் கூறுகின்றனர். ஆனால் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை அரசு பள்ளியில் படித்திருந்தால் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீட்டில் இடம்பெற முடியும்.
15 ஆயிரத்து 660 மாணவர்கள் தகுதியானவர்கள்
மொத்தம் 22 ஆயிரத்து 123 பேர் அரசு பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்தனர். பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டத்தில் 15 ஆயிரத்து 660 மாணவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது.
அரசு பள்ளியில் படித்த மாணவரா? என்பதை உள்ளீடு செய்ய தவறியிருந்தால் அவர்கள் சென்னை அல்லது திருநெல்வேலி அலுவலகங்களுக்கு நேரில் சென்று முறையிடலாம். மேலும் 51 உதவி மையங்களில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் ஒரே தரவரிசை எண்
இதுவரை 5 ஆயிரத்து 200 நபர்கள் புகார் கொடுக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 73 அரசு பள்ளி மாணவர்கள் இடம்பெற்று தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்துள்ளனர். அதில் தரவரிசைப் பட்டியில் விடுபட்ட மாணவி ஒருவரும் மீண்டும் முறையிட்டு சேர்ந்துள்ளார்.
பொது கலந்தாய்வுக்கு மட்டுமே இடங்களை தேர்வு செய்வது குறித்த விளக்கமளிக்கும் வீீடியோ வெளியிடப்படும்.
அரசு பள்ளி மாணவர் இடஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் விடுபடும் மாணவர்கள் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படும். ஒருவேளை புதிதாக இணைக்கப்படும் மாணவருக்கு ஏற்கனவே உள்ள மாணவரின் மதிபெண்ணும் ஒரே மதிப்பெண்ணாக இருந்தால் இருவருக்கும் ஒரே தரவரிசை எண் கொடுக்கப்படும்.அதில் முந்தைய மாணவருக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : பிஇ, பிடெக் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு