சென்னை: திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை அருகே பக்தவச்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக 400 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது 7 ஏக்கர் மட்டுமே கோயிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எனவே கோயில் நிலத்தை அளவீடு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கைத் தாக்கல் செய்யக் கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், காணாமல்போன செப்புப் பட்டயம் குறித்தும், கோயிலுக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வுசெய்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தஞ்சாவூர் இணை ஆணையர் தென்னரசு பதில் மனு தாக்கல்செய்தார்.
கோயில் நிலம் குறித்து அறிக்கை
அதில், காணாமல்போனதாகக் கூறப்படும் செப்புப் பட்டயம், பிரதான பொருளாக அறிவிக்கப்பட்டு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, கோயிலுக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், சில நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எத்தனை ஏக்கர் நிலம், யார் யாருக்குக் குத்தகைக்கு விடப்பட்டது? ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தின் அளவு குறித்த எந்த விவரங்களும் பதில் மனுவில் தெரிவிக்காத இணை ஆணையருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
நீதிமன்றத்துக்கு உரிய பதில் மனு தாக்கல்செய்யாத அறநிலையத் துறை இணை ஆணையர் தென்னரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் முழுமையான விவரங்களை இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கையாகத் தாக்கல்செய்ய அறநிலையத்துறைச் செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்