சென்னை: மகாராஷ்டிரா, மும்பை, கேரளா, டெல்லி, சென்னை ஆகிய ஐந்து மண்டலங்கள், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும்; கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பொது நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மகாராஷ்டிரா, மும்பை, கேரளா, டெல்லி, சென்னை ஆகிய ஐந்து மண்டலங்களிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நிகழ்ச்சிகளில் ஒருவக்கு ஏற்படும் தொற்று காரணமாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அதனைத் தடுப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் முதல் தவணைதடுப்பூசியை 93.74 விழுக்காடு பேர், இரண்டாம் தவணை தடுப்பூசி 82.55 விழுக்காடு பேர் செலுத்தியுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுள்ள 43 லட்சம் பேர் இன்னும் முதல்தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.
![மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15400361_jk.png)
இரண்டாம் தவணை தடுப்பூசி 1.22 கோடி பேர் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியை தகுதிபெற்ற முன் களப்பணியாளர்கள் 13 லட்சம் பேர் போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பொது இடங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று - ரத்த வங்கிகள் அலட்சியம்!