சென்னை: அம்பத்தூர் மேனாம்பேடு விரிவாக்கம் ஞானமூர்த்தி நகர் மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் யோகேஷ் (41). பாடி பில்டரான இவர், கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். 2021ஆம் ஆண்டு மட்டும் சுமார் 9க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துள்ளார்.
அதில், 2021ஆம் ஆண்டு 'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டத்தை தனதாக்கியுள்ளார். மேலும், 2021ஆம் ஆண்டு வைஷ்ணவி (28) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு தீவிர பாடி பில்டிங்கில் இருந்து ஒதுங்கிய அவர், பல்வேறு ஜிம்களில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்.07) காலை முதல் மாலை வரை ஜிம்மிற்கு வந்திருந்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்.
அதற்கு முன் மாலை 5.45 மணியளவில் கழிவறைக்குச் சென்ற அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறி மயங்கி அங்கேயே விழுந்துள்ளார். இந்நிலையில் கழிவறைக்குச் சென்றவர் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உடன் பயிற்சி மேற்கொண்டவர்கள், கழிவறை கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கு அவர் மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் திருமணத்திற்கு பிறகு தீவிர பாடி பில்டிங்கில் ஈடுபடாத நிலையில் சம்பவத்தன்று அவர் அதிக அளவிலான எடைகளை தூக்கியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கொரட்டூர் காவல் துறையினர், யோகேஷ் பணியாற்றிய ஜிம்மிற்குச் சென்று சம்பவதன்று என்ன நடந்தது என்பது குறித்து உடன் இருந்த பயிற்சியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: சென்னை நபரிடம் நூதன முறையில் ரூ.1.91 லட்சம் மோசடி செய்த பலே இளைஞர்கள்.. நீங்கள் உஷார்!