2017ஆம் ஆண்டு பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உரிமைக்குழு நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், வழக்கு குறித்து பேரவை செயலாளர், உரிமைக்குழு ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பேரவை செயலாளர், உரிமைக்குழு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அடிப்படை தவறுகள் களையப்பட்டு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் நோட்டீசில் "தடை செய்யப்பட்ட பொருட்களை" கொண்டு வந்ததற்காக என கூறிய நிலையில், இரண்டாவது நோட்டீஸில் "பேரவை தலைவர் அனுமதி பெறாமல் குட்கா பொருளை காட்டி இடையூறு ஏற்படுத்தியதாக" என மாற்றி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக விளக்கம் அளிக்கபட்டது.
பேரவை உரிமைக்குழு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, உரிமை பிரச்சினை என்பது முழுக்க முழுக்க சட்டப்பேரவை அதிகாரத்திற்கு உட்பட்டது. உரிமைக்குழு நோட்டீஸுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும், பின்னர் குழு ஆராய்ந்து சட்டமன்றத்திற்கு முடிவை அறிவிக்கும் என விளக்கம் அளித்தார். எனவே முகாந்திரம் இல்லாமல் நோட்டீஸுக்கு விதிக்கபட்ட தடையை நிறுத்திவைக்க வேண்டுமென வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டனர். மேலும், மேல்முறையீடு மனுக்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க...கட்டுப்பாட்டிற்கு வருகிறதா கரோனா; இரண்டு மாதங்களில் குறைவான பாதிப்ப