புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி அம்மாநிலத்தின் ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது எனக் கூறி, யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கிரண்பேடியும் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தன.
அந்த மனுவில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து யூனியன் பிரதேச அரசு வழக்கு தொடராத நிலையில், தனி நபரான எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரி அரசு எடுக்கும் அனைத்து முக்கிய முடிவுகள் உட்பட எந்த முடிவும் மேல்முறையீடு வழக்கின் இறுதி தீர்ப்புக்குட்பட்டது என உத்தரவிட்டு, வழக்கை இறுதி விசாரணைக்காக அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ராஜீவ் கொலை வழக்கு - ராபர்ட் பயஸ் பரோல் குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறையினருக்கு ஆணை!