சென்னையில் கொலை, திருட்டு, சைபர் குற்றங்கள், போதை பொருள்கள் கடத்தல், நில அபகரிப்பு, போக்சோ,உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்று (ஜூன். 5) வரை கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 101 பேர், சங்கிலி, செல்போன் பறிப்பு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 29 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 12 பேர், கஞ்சா போதை பொருள்கள் விற்ற 12 பேர், உணவு பொருள் கடத்தியதாக ஒருவர், ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்ற இரண்டு பேர் என மொத்தம் 157 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .
கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளசந்தையில் விற்றதாக இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடமிருந்து 299 ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட ஏழு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து ரெம்டெசிவிர் மருந்தை கள்ளசந்தையில் விற்றால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை: இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!