சென்னை: இலங்கையில் கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் பயணிகள் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (ஜூன் 26) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த பாத்திமா ரபியா (27), பாத்திமா நவியா (24), பாத்திமா ஆப்ரா (32) ஆகிய மூன்று பெண்கள் சுற்றுலா விசாவில் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்தது தெரியவந்தது.
இந்தப் பெண்கள் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறி விட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றனர். அப்போது சுங்க அலுவலர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பெண் சுங்க அலுவலர்கள் இந்த மூன்று பெண்களையும் நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினர். இதையடுத்து சுங்க அலுவலர்களின் சந்தேகம் வலுத்தது.
இதனால் பெண் சுங்க அலுவலர்கள் மூன்று பெண்களையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர்களுடைய உள்ளாடை மற்றும் தலை முடியில் பொருத்தும் ரப்பர் பேண்ட் ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் ஒரு கிலோ 275 கிராம் தங்கத்தை சுங்க அலுவலர்கள் கைப்பற்றினர்.
இதன் சர்வதேச மதிப்பு 59.26 லட்சம் ரூபாயாக இருக்கும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுங்க அலுவலர்கள் மூன்று பெண்களையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த தங்கத்தை சென்னையில் யாரிடம் கொடுக்க எடுத்து வருகின்றனர்? என்று விசாரணை நடக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகமாகி விட்டதால், வாழ்வாதாரத்தை இழந்த பல பெண்கள் இதைப்போல் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதையும் படிங்க: அமைச்சர்களிடம் பேசி அரசு வேலை தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது