உலக பொருளாதார மந்தநிலையால் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்தது. மந்தநிலை காரணமாகப் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் ஆர்வம் காட்டிவந்ததே விலையேற்றத்திற்கான காரணமாகக் கூறப்பட்டது. இதனால், சாமானிய மக்கள் கலக்கமடைந்தனர். இருப்பினும், பொருளாதாரம் முன்னேற்றம் காணும் பட்சத்தில் தங்கம் விலை குறையவும் வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு 552 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 776 ரூபாயாக இன்று விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு 69 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 97 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 21ஆம் தேதி 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், மூன்று நாள்களுக்கு முன்னர் திடீரென்று உயர்ந்து 33 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. தற்போது, சுமார் 500 ரூபாய் குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பங்குச்சந்தை 800 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவைச் சந்தித்ததன் எதிரொலியாக தங்கம் விலை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து 52 ரூபாய் 70 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளி 600 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 700 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 800 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவு