சென்னை: ஜி ஸ்கொயர் என்னும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக குற்றசாட்டு எழுந்தது. இதில், ஜூனியர் விகடன் மற்றும் சில தனி நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே கண்ணனுக்குப் பதிலாக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள பிரேம் ஆனந்த் சின்ஹா, இதற்கு முன் சென்னை காவல்துறையில் இணை ஆணையர், கூடுதல் ஆணையர், பெரம்பலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல்துறை எஸ்பி, மத்திய போதைப் பொருள் சென்னை மண்டல இயக்குனர், சென்னை காவல்துறையில் போக்குவரத்து இணை ஆணையர், சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் ஆகிய நிலைகளில் காவல்துறையில் பணியாற்றியுள்ளார்.
மேலும், 2001 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை மாநகர காவல் ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு பணியில் நல்ல அனுபவமும் பெற்றவர். இந்நிலையில், இவர் நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், இன்று பிரதமர் மோடி சென்னைக்கு வரும் நிலையில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாஜக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கையாளவில்லை என்ற குற்றச்சாட்டிலும் கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜி ஸ்கொயர் பிரச்சனை: விகடன் குழுமம் சார்பில் புகார்