சென்னை: தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலையத்தின் சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனா். அப்போது திண்டுக்கல்லைச்சேர்ந்த விவேக் (28) என்ற பயணி பெரிய பிளாஸ்டிக் கூடையினை எடுத்து வந்தாா். அவர் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த பதற்றத்துடனும், பரபரப்புடனும் காணப்பட்டார்.
இதை அடுத்து சுங்க அலுவலர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். இதனால் அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையை அலுவலர்கள் திறந்து பாா்த்து, அதிர்ச்சி அடைந்தனா். அதற்குள் வெளிநாட்டில் உள்ள மலைப்பாம்பின் 5 குட்டிகள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா்.
இதனால் விவேக்கை வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னையில் உள்ள மத்திய வன காப்பக குற்றப்பிரிவு அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அந்த அலுவலர்கள் உடனடியாக விரைந்து வந்து, இந்த மலைப்பாம்பு குட்டிகளை ஆய்வு செய்தனர்.
இவைகள் அனைத்தும் ஆப்ரிக்க நாட்டு காடுகளில் வசிக்கக் கூடியவைகள். இந்த மலைப்பாம்பு குட்டிகளுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது. மேலும் இந்த மலைப்பாம்பு குட்டிகளால், வெளிநாட்டு நோய்க்கிருமிகள் இந்தியாவிற்குப் பரவி விடும். எனவே, இதை வந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பி விட வேண்டும். அதற்கான செலவை பாம்புக்குட்டிகளை கொண்டு வந்த விவேக்கிடும் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
அதன்படி சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள், விவேக்கை கைது செய்தனர். பாம்புக்குட்டிகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் மறுநாள் அதே தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த 5 மலைப்பாம்பு குட்டிகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்பினா். அதற்கான செலவத்தொகை விவேக்கிடம் வசூலிக்கப்பட்டது. விவேக்கிடம் மேலும் சுங்க அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை எதற்காக எடுத்து வந்தார்? இதைக் கொண்டு வர சொன்னது யார்? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க:விஷ எறும்புகள் படையெடுப்பால் மக்கள் பீதி... கிராமத்தை காலி செய்ய முடிவு...