சென்னை: கடந்த 1974ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனிதப் பயணம் செல்லும் பக்தர்களை, எந்தவிதப் போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் எனவும்; இந்திய - இலங்கை கப்பல்கள், இருநாட்டு கடல் பகுதிகளில் செல்ல உரிமை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வழக்கு
இந்த ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்தக்கோரியும் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரியும் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கச்சத்தீவு ஒப்பந்தம்
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தின் இந்தப் பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படாததால், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எந்த உரிமையும் இல்லை
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை எனவும்; பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய அரசு அவர்களைக் கைது செய்வதாகவும் குறிப்பிட்டார். பின்னர், இதே கோரிக்கையுடன் மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்துகிறது - ஸ்டாலின் சீற்றம்