வங்கக் கடலில் கோடியக்கரைக்கு அருகே தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர், காரைக்காலை சேர்ந்த 3 பேர் என மொத்தம் பத்து பேர் தங்களது விசைப்படகில் நேற்று முன்தினம் (அக். 20) இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎன்எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்பு பணியிலிருந்த இந்திய கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் மயிலாடுதுறையை அடுத்த வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்தது. அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கடற்படையின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட மீனவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய கடற்படை வீரர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வேதாரண்யம் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இஸ்ரோவின் வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்எல்வி மாக்-3 இன்று நள்ளிரவில் விண்ணில் பாய்கிறது