சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி, இவர் கடந்த மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே 155 அடி உயரம் உள்ள மலை உச்சியில் இருந்து கண்களைக் கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி சாதனை படைத்தார்.
அதேபோல் இமாசலப் பிரதேச மாநிலத்தில் குலாங் கிராமத்தின் மலை உச்சியிலிருந்து தன் இளைய மகள் வித்திஷா(வயது9) முதுகில் கட்டிக்கொண்டு, மூத்த மகள் தக்க்ஷா(வயது 12) வையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, மூவரும் கண்களை கட்டிக்கொண்டு 165 அடி உயரத்தை 55 வினாடிகளில் இறங்கி இரண்டாவது சாதனை படைத்தார்.
மேலும் மூன்றாவது உலக சாதனையாகக் கடந்த குடியரசு தினத்தன்று சென்னை வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவதாரத்தில் 3 மணி நேரம் குதிரை மீது அமர்ந்து 1389 அம்புகள் துல்லியமாக எய்து உலக சாதனை படைத்தார்.
இதனால் அடுத்த மாதம் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கான தகுதியை முத்தமிழ்ச் செல்வி பெற்றுள்ளார். இதில் முதல் தமிழ் பெண்ணாக முத்தமிழ் செல்வி தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, டெல்லியில் இருந்து சென்னை வந்த முத்தமிழ் செல்விக்கு விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தமிழ் செல்வி, "இமயமலையில் ஏறுவதற்கான பயிற்சியை தற்போது முடித்து வந்து உள்ளேன், எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.முதல் தமிழ்ப் பெண்மணியாக எவரெஸ்ட் மலை ஏறி சாதனை படைத்து தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பேன். இந்த சாதனையை செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும், தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்" என கூறினார்.