சென்னை: மணலியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.பி.சி.எல் (CPCL - Chennai Petroleum Corporation Limited) பெட்ரோலிய நிறுவனத்தில் இன்று (டிச.16) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கரும்புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், அந்த பகுதியில் பணியாற்றிய பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெறியேற்றப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளன.
சி.பி.சி.எல் பெட்ரோலிய நிறுவனம் என்பதால் பாதிப்பு பெரிய அளவில் இருக்கக் கூடாது என்பதற்காக தீ விபத்து ஏற்பட்டவுடன் முன்னெச்சரிக்கைக்காக நிறுவனத்தில் உள்ள தீயணைப்பு உபகரணங்கள் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்துத் தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சிபிசிஎல் நிறுவனத்தில் தார் செல்லக்கூடிய ராட்சத குழாயில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்திற்கு அருகில் பல மீனவ கிராமங்களும், குடியிருப்பு பகுதிகளும் இருப்பதால் பொதுமக்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், மிக்ஜாம் புயலின் போது இந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகளின் காரணமாக மணலி முதல் எண்ணூர் முகத்துவாரம் வரை எண்ணெய் கழிவுகள் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, எண்ணூர் குப்பம், நெடுங்குப்பம், தாழங்குப்பம், மணலி ஆகிய குடியிருப்பு பகுதி மக்கள், எண்ணெய் கழிவுகள் தேங்கியதன் காரணமாகப் பல சரும நோய்களுக்கு தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மீனவர்கள் கூறினர்.
மீனவர்களைப் பொருத்தவரை தங்களுக்கு வாழ்வாதாரத்திற்குப் பயன்படக்கூடிய படகுகள், மீன்பிடி வலைகள் என அனைத்துமே இந்த எண்ணெய் கழிவால் பாதிப்படைந்தாக கூறியுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்த தீ விபத்து காரணமாக வெளிவரும் கரும்புகையால் தங்களுக்குச் சுவாச பிரச்சனை உண்டாக்கும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: “சில சக்திகளின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின்