சென்னை: அதிமுகவில் ஒற்றைtஹ் தலைமையைக் கொண்டு வந்த பொதுக்குழு தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிமையியல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “பொதுச் செயலாளர் என என்னை (எடப்பாடி பழனிசாமி) தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ. பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாக உள்ளது.
எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நாளை (செப் 21) விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!