திருமண நிகழ்ச்சிகள் இப்போது மக்களைக் கவரும்விதத்தில் வித்தியாசமான முறைகளில் நடக்கின்றன. அழைப்பிதழிலிருந்து- மணமக்கள் உடுத்தும் ஆடை, மேடை அலங்காரம், ஊர்வலம், உணவு எல்லாமுமே காலத்துக்குத் தக்கபடியான மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், தற்போது, ஒருபடி மேல் சென்று, திருமண முறையே மாறி புதுமை படைத்துக்கொண்டிருக்கிறது. சாதாரண திருமணத்தைவிட அட்வன்சர் திருமணத்தைதான் தம்பதிகள் விரும்புகின்றனர். அந்த வகையில், தம்பதி ஒருவர், வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வான திருமணத்தை 60 அடி ஆழத்தில் நடத்தி மேலும் மறக்க முடியாத அற்புத நிகழ்வாக கொண்டாடியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சின்னதுரை, ஸ்வேதா ஆகியோர், தங்களது திருமணத்தை கடலில் நீச்சல் கற்றுத் தருவதற்கான டெம்பிள் அட்வென்சர் டிவ் மையத்தின் உதவியுடன் நீலாங்கரை கடற்பகுதியில் 5 கிமீ தூரத்தில் 60 அடி ஆழத்தில் இந்து முறைப்படி இன்று காலை 6.30 மணியளவில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
ஆழ்கடலில் வாழை மரங்கள், தோரணம் கட்டப்பட்டு, மணமக்கள் இருவரும் இந்து முறைப்படி வேட்டி சட்டையும், கூரைப் புடவையும் அணிந்திருந்தனர். கடலில் நீந்துவதற்கான பிரத்யேேக கருவிகளுடன் ஆழ்கடலில் தாலி கட்டி தங்களது இல்லற வாழ்க்கையில் இருவரும் அடியெடுத்துவைத்தனர்.
இது குறித்து டெம்பிள் அட்வென்சர் டிவ் மையத்தின் நிறுவனர் அரவிந்த் தருண்ஸ்ரீ கூறுகையில், "மணமகன் சின்னதுரை தனது பள்ளியில்தான் நீச்சல் பயிற்சி படித்தார். அப்போது, அவர் திருமணத்தைப் பற்றி கூறுகையில், வித்தியாசமான முறையில் நடத்தலாம் எனக் கூறினேன். சின்னதுரையும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, மணமகள் வீட்டில் பேசி அனுமதி பெற்றோம். இதையடுத்து, முதலில் மணமகன், மணமகளுக்கு நீச்சல் குளத்தில் மூன்று நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர், ஆழ்கடலில் திருமணத்தை நடத்துவதற்காக ஒருநாள் பயிற்சி அளித்தோம். திருமணத்தை நடத்துவதற்கான சரியான நேரத்திற்காக ஆவலோடு காத்திருந்தோம். எதிர்பார்த்தபடியே இன்று (பிப். 01) காலை கடல் அமைதியாக இருந்தது.
கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் 60 அடி ஆழத்தில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தோம். முன்னதாக, ஆழ்கடலில் 12 அடி ஆழத்தில் கிறிஸ்தவ முறைப்படி கேரளாவில் திருமணம் நடைபெற்றுள்ளது" எனத் தெரிவித்தார்.