சென்னை: தமிழ்நாட்டைச்சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையிலுள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பதாரர்களிடமிருந்து இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்விற்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, 7077 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2023ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் முதல்நிலைத்தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் வரும் நவ.13ஆம் தேதியன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ளது.
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த ஆர்வலர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பயிற்சி மைய இணையதளத்தின் www.civilservicecoaching.com வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும். தேர்வு 13.11.2022 அன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை இரண்டரை மணி நேரம் நடைபெறும்.
பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்திலும், தொலைபேசி எண். 044 – 24621475, அலைபேசி எண். 94442 86657 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாக்குதல் நடத்த ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் வாங்கியதாக என்.ஐ.ஏ தகவல்!