சென்னை: காஞ்சிபுரம், திம்மசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட குழு சார்பில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, கூவத்தூர் முதல் தென்பட்டிணம் இடையிலான கடலோர பகுதியில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூன்றாம் ஆண்டு மாணவர் மதனகோபால், கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். மாணவரின் மரணத்திற்கு தொடர்புடைய கல்வி நிறுவனம், மாநில அரசு, மத்திய அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அலட்சியமே காரணம் என கூறி அவரது தாயார் சர்மிளா, மற்றும் சகோதரி திவ்யபாரதி 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மதனகோபால் மரணத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும், தகவல் அளித்திருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதே போன்று தனியார் கல்லூரி சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், எவரும் கடலில் இறங்கக் கூடாது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 54 மாணவ - மாணவியருக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருந்ததாகவும், ஆனாலும் மதனகோபாலும், மற்றொரு மாணவரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர் எனவும் கூறப்பட்டது. அலையில் சிக்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சித்த போது, மதனகோபால் உயிரிழந்து விட்டதாகவும், இந்த நிகழ்வுக்கு கல்லூரியை பொறுப்பாக்க முடியாது எனவும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்து ஒப்புதல் பெற்றிருந்தால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும், 21 வயது மாணவர் உயிரிழந்திருக்க மாட்டார் என கூறினார். மாணவரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
மேலும் இனி வருங்காலங்களில் கல்விச் சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது, மாணவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.