திமுகவின் முன்னாள் அமைச்சரும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ரகுமான் கான் மாரடைப்பு காரணமாக இன்று காலை ( ஆக. 20) உயிரிழந்தார்.
இவர் திமுகவின் இடி, மின்னல், மழை எனப் போற்றப்படுபவர்களில் ஒருவர். திமுகவின் சிறுபான்மையினர் பிரிவில் முக்கியப் பங்காற்றியவர். இவரது மறைவிற்கு கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவரது மறைவு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் ’இடி, மின்னல், மழை’ யில், ஓயாத இடி முழக்கமாகத் திகழ்ந்த, கழகத்தின் சிங்கச் சிப்பாய்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் மற்றும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான அண்ணன் ரகுமான் கான் மறைந்து விட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும் பெரும் வேதனைக்கும் உள்ளாகி நிற்கிறேன்.
ஆறுதல் கூறவோ, இரங்கல் தெரிவிக்கவோ ஆற்றலின்றி என் இதயம் அழுகிறது. திறன் இழந்து திண்டாடுகிறது. திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் காலம்தொட்டு, கழகத்திற்காக அவர் ஆற்றிய அரும் பணிகளும் ஆலோசனைகளும் என் கண்முன் நிற்கிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய அனைவரும் அண்ணன் ரகுமான் கானின் கம்பீரமான உரையால், காந்த சக்திமிக்க கருத்துக்களால் கவரப்பட்டவர்கள். முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோருடன் தமிழ் மொழியைக் காப்பாற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் பருவத்திலேயே கலந்து கொண்டவர் அவர்.
1977ஆம் ஆண்டு முதன்முதலில் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, சட்டப்பேரவை உறுப்பினரானார். ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினர். அதில் ஒரு ஐந்து ஆண்டு தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த் துறை அமைச்சர். இருமுறை சிறுசேமிப்புத் துறையின் துணைத் தலைவர். தற்போதுவரை உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்து எனக்கு அவ்வப்போது ஆலோசனை தரும் அட்சயப் பாத்திரம் அவர்.
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பாசமிகு அண்ணனாக என்னிடம் கடைசியாக அவர் சொன்ன வார்த்தை, “தம்பி, உங்கள் உடல்நலனை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நலமாக இருப்பதுதான் இன்று இந்த நாட்டுக்கு இப்போது தேவை” என்ற அன்புக் கட்டளை.
முத்தமிழறிஞர் கலைஞரின் போர்வாளான முரசொலியில் இனி அண்ணன் ரகுமான் கான் எழுதும் கட்டுரைகளை எங்கு போய்த் தேடிப் படிப்பேன்? நான் எடுக்கும் நடவடிக்கைகளை அவ்வப்போது தொலைபேசியில் அழைத்துப் பாராட்டுவாரே! அந்த அண்ணனின் குரலை இனி எங்குதான் கேட்பேன்? அவர் அளித்தது போன்ற அற்புதமான ஆலோசனைகளை இனி எந்த அண்ணனிடம் பெறுவேன்?
ஆற்றல் மிக்க, அன்பு மிக்க இந்த இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒருவரான அண்ணனை இழந்து பரிதவிக்கிறேன். அண்ணனின் மூச்சு நின்று இருக்கலாம். ஆனால் அவரின் ’முரசொலி’ கட்டுரைகளும், ’முழங்கிய மேடைப் பேச்சுகளும்’ என்றும் கண்களிலேயே இருக்கும்.
பாசமிகு அண்ணன் ரகுமான் கான் அவர்களின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.