திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று, சமூகநீதியைப் பாதுகாக்கவும், பல நூற்றாண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்டுள்ள, இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கு சமத்துவத்தை உறுதிசெய்யவும், அவர்கள் சம வாய்ப்பைப் பெற்றிடவும் திமுக நடத்தும் சமூகநீதிக்கான போருக்கு ஆதரவு கோரி, தேசிய அளவிலான முக்கியத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு தமது ஆதரவை நல்குவதாகப் பதிலளித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அதில், “மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்கான மாநில இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைவர் சோனியா காந்திக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முன்னேறிய சாதியினருக்கான இடஒதுக்கீடு விவாதம்; ஆ ராசாவுக்கு, வீரமணி புகழாரம்!