தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் 2017ஆம் ஆண்டு குட்கா கொண்டு வந்ததாக அனுப்பப்பட்ட உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 21 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி ரத்து செய்து ஆகஸ்ட் 25ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கங்களை பெற்று நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதி விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், பேரவை தலைவர், செயலர், உரிமைக்குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த தடையை நீக்க கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டப்பேரவை செயலர், உரிமைக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இடைக்கால தடையை நீக்க மறுத்ததுடன், மேல்முறையீடு மனுக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், உரிமைக்குழு நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கில் பேரவை செயலர் கே. சீனிவாசன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்தது உரிமை மீறலா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க உரிமைக்குழுவுக்கு சுதந்திரம் அளித்துள்ள நிலையில், நோட்டீஸுக்கு தடை விதித்தது தவறானது.
நோட்டீஸுக்கு ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்பளித்துள்ள நிலையில், அதில் ஆஜராகாமல் தொடர்ந்த வழக்கில் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நோட்டீஸ் மீதான தடை நீக்க கோரும் மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க...சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற வழக்கு: தனி நீதிபதியின் தடை உத்தரவை நிறுத்திவைக்க மறுப்பு!