கரோனா ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியனர் உள்ளிட்டோர் உணவு வழங்க தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருள்களையும், மருந்துப் பொருள்களையும் வழங்கப்பட்டுவருகிறது. முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் இந்தப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
ஒருபுறம் வசதியான மக்களுக்கு ஆன்லைன் மூலம் பொருள்கள் கிடைக்க அனுமதியளித்துள்ள அரசு, ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள், மளிகை பொருள்கள், மருந்து பொருள்கள் வழங்கும் அரசியல் கட்சியினரையும், தன்னார்வலர்களையும் தடை செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுசம்பந்தமாக அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு அவசர கால நீதிபதிகள் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.